Showing posts with label காவிரி. Show all posts
Showing posts with label காவிரி. Show all posts

Thursday, September 1, 2011

மனிதநேயம்


மனித சிற்பத்தை வடிக்கும் உளி 
கல்லாய் நின்றவனை கலையாக்கும் கருவி 
அன்பெனும் அமிழ்தை அரவணைப்பு பாத்திரத்திலிட்டு 
கையிலே நீட்டுவதல்ல கனிவோடு ஊட்டுவது 

பொருளை கொடுப்பதல்ல பொருள்பட கொடுப்பது 
கொடுப்பதும் கொள்வதும் குற்றமற்றதாய் இருப்பது 
உயர்வுதாழ்வு காட்டும் மனிததராசின் மனமுள் 
மனிதநேயத்தை நோக்கி என்றும் நிற்பதில்லை 

மனிதமனம் தேடுவது உதவியை மட்டுமல்ல 
உதவும் கரங்களின் பரிவெனும் ஸ்பரிசமும்தான்
உணவை மட்டும் கொடுப்பது மனிதம் 
அருகிருந்து உண்ண செய்வது மனிதநேயம் 

தனித் தூண்களாய் தவித்து நிற்ப்பதைவிட  
மனிதநேயம் எனும் கூரையால் பிணைக்கப்பட்டு 
மண்டபமாய் மணி கோபுரமாய் வாழ்ந்து 
மனிதம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம்!! 

Thursday, July 28, 2011

காவிரியை காப்போம்!

தென்னையின் நீரென சிறுஊற்றில் பிறந்தாய்
தமிழன்னையின் சேயென தரணியில் வளர்ந்தாய்
பெண்மையின் அன்பை ஊரெலாம் பொழிந்தாய்
கணவனான கடலில் கவின்மிக கலந்தாய்
இடையில் பல இன்னல்களும் இருந்தன.

பெண்மையின் இருப்பிடமாய் பேருருகொண்ட உன்னை
பேதைகள் பலர் பெருமுயற்சியால் தடுத்தனர்
இவ்வன்னை மடியில் வளரத் தடைபல
அத்தடைகளை கோபம் கொண்டு உடைக்கவில்லை
பெண்மையின் அங்கமே பொறுமை ஆதலலோ ?

உன்னை மீட்க பொறுமையுடன் போரிடுகிறோம்
உன்னால் வளர்ந்ததெங்கள் எண்ணங்கள் ஆதலால்
பொலிவுடைய பொன்னி என்னும் பெண்ணே
எங்களை பேணும் உன்னை வளபடுத்துவோம்  
நீ வளரும் காலம் வெகுஅருகில்.