Thursday, November 24, 2011

மழை காலம்

காலை இளங்கதிரை இன்னும் காணவில்லை.
அழகு மிகு ஆகாயத்தில் அவன் கால்கள் படவில்லையோ? இல்லை.
கருமேகங்கள் அவனை கவர்ந்து கொண்டன.

அவை கதிரவனின் கரங்களாய் இருக்குமோ?
இராது. கதிரவனின் கைகள் கருநிறமாய் இருக்க முடியாது.
அவை ஆதவனின் அரும்கூந்தலாய் இருக்குமோ?
சில கணங்களே அவை இருக்கின்றன.
அவை அவன் போர்வையாய் தான் இருக்கவேண்டும்.

கதிரவன் போர்வையில் ஒளிந்துகொண்டு விளையாட்டாய்
மழையை அனுப்பினான் உலகை எழுப்ப!
மின்னல்கள் விரைவு காட்டின.
இடியோ இதோ வருகிறேன் என்று அன்ன நடை இட்டது.
இவ்வளவு மெதுவாய் வந்தபோதும் எதன் மீது மோதியதோ?
இத்தனை பெரிய முழக்கம்.

மழையின் கரங்கள் மெதுமெதுவாய் பூமியை தொட்டன.
உடன் பூமி சிலிர்த்ததோ? அதன் மீதிருந்த துகள்கள் பறந்தன.
மண் வாசனை மனதை நிறைத்தது.
வாசனையை நுகர்ந்த காற்று தென்றலாய் துள்ளியது.

அதன் துள்ளலின் ஆனந்தம் மரங்களை தொற்றியது.
அதன் ஆனந்தம் ஆட்டமாய் வெளிப்பட்டது.
தூறலின் தாளம் ஆட்டத்திற்கு இசையானது.
அரங்கேற்றம் அமர்களமாய் அமைந்தது.

புது குளியல் முடித்து புத்துணர்ச்சி பெற்றெழுந்தது உலகம்.
புதுவண்ணம் கொண்ட புத்தாடை புனைந்தது.
புதுஉலகை கண்டு ஆதவன் அகமகிழ்தான்
புது பொலிவுடன் பணிகளை தொடர்ந்தன.   

No comments:

Post a Comment